தமிழகத்தில் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டிய 8000க்கும் அதிகமான ஏரிகள்! அமைச்சர் தகவல்!

0
65

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 14 ஆயிரத்து 138 ஏரிகளில் 8085 ஏரிகள் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி இருக்கின்றன, 1806 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 90 நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்தமாக முழு கொள்ளளவான 224. 297 டிஎம்சி தண்ணீரில் 209. 945 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது 93 ரூ 60 சதவீதம் ஆகும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் இருக்கின்ற மற்ற அணைகளிலிருந்து நீர் திறப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்கி பாதுகாப்பான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் மிகவும் கவனமாக உபரிநீர் திறந்து விடப்பட்டதால் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக, உண்டாகி இருக்கின்ற பயிர் சேதங்கள் தொடர்பாக வருவாய் வேளாண் தோட்டக்கலை துறை மூலமாக கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதிகமாக மழை பொழிவு ஏற்பட்டிருக்கின்ற மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் தேங்கி இருக்கின்ற மழைநீர் வெளியேற்ற பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 279 முகாம்களில் 20 ஆயிரத்து 236 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 2148 பேர் 15 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நேற்று காலை 1 லட்சத்து 20 ஆயிரத்து 160 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது என்றும், அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சென்ற 24 மணி நேரத்தில் 522 கால்நடைகளும், 38 407 கோழிகளும் பலியாகி இருக்கின்றனர். 2623 குடிசைகள் பகுதியாகவும், 168 குடிசைகள் முழுமையாகவும், என்று ஒட்டுமொத்தமாக 2793 குடிசைகளும், 467 வீடு பாதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும், என்று ஒட்டுமொத்தமாக 474 வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. மழைநீர் தேங்கி இருக்கின்ற 561 பகுதிகளில் 227 பகுதிகளில் தேங்கி இருக்கின்ற மழை நீர் அகற்றப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 8 ஆயிரத்து 570 புகார்கள் வந்தது. அதில் 2681 புகார்கள் தீர்வுகாண பட்டிருக்கின்றன. மீதம் இருக்கின்ற புகார்களின் மீது துரித கதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 1247 புகார்கள் வந்தன, அதில் 5670 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டிருக்கிறது. மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 5332 புகார்கள் வரப்பெற்றது, அதில் 5,195 புகார்கள் தீர்வு காணப்பட்டன என கூறியிருக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன்.