என்னய்யா இது வம்பா போச்சு!ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க வருத்தம் தெரிவித்த பொன்முடி!

0
114

திமுகவின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பேச்சில் சமீப காலமாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் சார்பாக பெண்களுக்கு இலவசமாக செயல்படுத்தி வரும் திட்டமான பேருந்து பயணத்திட்டத்தை ஓசி டிக்கெட் என்று தெரிவித்து பேசியது மிகப் பெரிய பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்திலும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசிய காட்சி கண்டனத்திற்குள்ளானது.

இது போன்ற பேச்சுக்கள் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றன. இந்த நிலையில் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பேசியபோது ஒருபுறம் திமுக தலைவர், மறுபுறம் தமிழகத்தின் முதலமைச்சர் மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல இருக்கிறது என் நிலைமை.

இப்படியான சூழ்நிலையில், மேலும் துன்பப்படுத்துவதைப் போல கழக நிர்வாகிகளோ, மூத்த அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் போய் சொல்வது? என்று கேள்வி எழுப்பினார்.

தினந்தோறும் காலையில் நம் கட்சியினர் எந்த புது பிரச்சனையும் உருவாக்கி விடக்கூடாது என்ற நினைப்போடு தான் நான் கண் விழிக்கிறேன். சில சமயங்களில் இது போன்ற விவகாரங்கள் என்னை தூங்கவிடாமல் செய்து விடுகிறது.

என்னுடைய உடம்பைப் பார்த்தாலே தங்களுக்கு தெரியும் என வேதனை உடன் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சும் வைரலாக பகிரப்பட்ட நிலையில், திமுகவின் தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

அப்போது பேசிய பொன்முடி ஓசி என பேசியதற்கு மேடையில் வருத்தம் தெரிவித்தார். அதோடு சகஜமாக பேசிய வார்த்தையை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் உண்மையில் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பொதுக் கூட்டத்திலோ அல்லது வேறு எங்கேயோ வாயா, போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது என்று தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தன்னைப் பார்த்து அப்படி பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.

பாஜக டார்கெட் செய்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டாலின் ஆட்சியில் வேறு எதை வைத்தும் அரசியல் செய்ய இயலாது என்பதால் ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு அதை வைத்து அரசியல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் பொன்முடி