இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு விழுந்த முதல் அடி
புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு முன்னெச்சரிக்கைகளையும் மீறி நடைபெற்ற இந்த தாக்குதல் நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரிடத்திலிருந்தும் கண்டனங்கள் வெளிவர தொடங்கியது. 40 க்கும் மேற்பட்ட வீரர்களின் உயிர்களை பலிகொண்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டை MFN-Most Favoured Nation என்ற வர்த்தகத்திற்கு சாதகமான நாடுகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பாகிஸ்தானுடனான அனைத்து விதமான வர்த்தக தொடர்புகளையும் இந்தியா துண்டித்துள்ளது.
MFN: எம்எப்என் என்றால் என்ன?
கடந்த 1994ஆம் ஆண்டில் WTO என்றழைக்கப்படும் உலக வர்த்தக அமைப்பில் இணைந்துள்ள நாடுகளுக்கு இடையே GATT என்ற கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் சட்டம் கொண்டு வரப்பட்டது. வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் வர்த்தகம் வைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு MFN என்றழைக்கப்படும் ”வர்த்தகத்திற்கு சாதகமான நாடு” (எம்எப்என்) என்கிற தகுதியை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
MFN அந்தஸ்து பெற்ற நாடுகள் பெரும் பயன்கள்:
MFN அந்தஸ்து வளரும் நாடுகள் வர்த்தகம் செய்ய மிகவும் உதவியாக உள்ளது. MFN அந்தஸ்து பெற்ற நாடுகள் பொருட்களை வர்த்தகம் செய்ய பரவலான சந்தையை பயன்படுத்தி கொள்ள முடியும், மிகவும் குறைக்கப்பட்ட சுங்கவரி மற்றும் வர்த்தக தடைகளை காரணமாக ஏற்றுமதி பொருட்களின் விலை குறைக்க முடியும். இதன் மூலம் பொருளாதாரமும் ஏற்றுமதி துறையும் முன்னேற வாய்ப்புள்ளது.
MFN பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் பாகிஸ்தானிற்கான பாதிப்பு:
பாகிஸ்தானை MFN பட்டியலிலிருந்து நீக்கியதால் இனி பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது எந்தளவிற்கு வேண்டுமானாலும் இந்திய அரசு சுங்க வரி விதிக்கலாம். இதன் மூலம் பாகிஸ்தானின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.
கடந்த 2017-18 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான வர்த்தகம் 2.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 2016-17ஆம் ஆண்டிற்கான வர்த்தகம் 2.27 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த 2017-18ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு 488.5 மில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே ஆண்டில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 1.92 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
MFN பட்டியலிலிருந்து பாகிஸ்தானை நீக்கியதன் மூலம் தற்போது உலக நாடுகளில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்றும்,மேலும் உலக நாடுகளுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத செயலை எடுத்து செல்ல வேண்டும் என்றும் இந்தியா முடிவெடுத்துள்ளது தெளிவாகிறது.
மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.