அமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!

0
54

ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கூலித்தொழிலாளியின் மகனுடைய மருத்துவ படிப்பிற்கான கல்லூரி செலவு முழுவதையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றார். அவருடைய மகன் மாரிமுத்து வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார்.

நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இளநிலை மருத்துவ பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5% முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் வாயிலாக மாணவர் மாரிமுத்துவுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்திருக்கின்றது. குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக கல்லூரியில் சேர்வதற்கான கட்டணம் கூட கட்ட இயலாத நிலையில், இருந்த மாணவன் மாரிமுத்து சம்பந்தமாக தகவல் அறிந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள்,

அந்த மாணவரையும் அவருடைய பெற்றோர்களையும் நேரில் வரச்சொல்லி வாழ்த்து தெரிவித்து அந்த மாணவனுக்கு மருத்துவப் படிப்பு முடியும் வரை அவருடைய கல்லூரி கட்டணம் அனைத்தையும் தாமே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கின்றார். அதோடு முதலாம் வருடத்திற்கான கட்டுமான ரூபாய் 20 ஆயிரத்தை மாணவரிடம் இன்று வழங்கினார் எம் ஆர் விஜயபாஸ்கர். எதிர்பாராத விதமாக கிடைத்த இந்த உதவியால் மனம் நெகிழ்ந்து போன அந்த மாணவர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் இட ஒதுக்கீடு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், கல்லூரி கட்டணத்தை ஏற்று தங்களுடைய வாழ்வில் ஒளி விளக்கேற்றிய மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மனம் உருகி தங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.