திடீரென்று நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்! அதிர்ச்சியில் பன்னீர்&கோ

0
76

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிக்கையின் நிர்வாகம் சென்றதைத் தொடர்ந்து அவர் அதனை விமர்சனம் செய்ததன் காரணமாக, நமது எம்ஜிஆர் நாளிதழிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக சென்றவுடன் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த மோதல் உச்சமடைந்த நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வத்தின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டது. இந்த சூழலில் தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விளங்குவதாக அறிவித்தார்.

இவர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். குறிப்பாக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சிறைக்குச் செல்வார் என்று கூறி வந்தார்.

அதேபோல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப் படை காவல்துறையினரின் விசாரணைக்கும் ஆஜராகி பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் எழுத்து பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுவரையில் முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி.

என் கருத்துக்களால் யாராவது காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் அழகுராஜின் இந்த திடீர் அறிவிப்பு பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.