ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்!

0
68

ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்!

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக போராட வீதிக்கு வருமாறு கவிதை ஒன்றை எழுதியுள்ளார் திமுக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன்.

சமீபத்தில் தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டுக்குத் தேவை என்றும் அதனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்படி ஏதேனும் நடந்தால் முதல் ஆளாக நான் களத்துக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வண்ணாரப் பேட்டையில் இந்த சட்டத்துக்கு எதிராக அமைதியாக போராடிக் கொண்டு இருந்த இஸ்லாமியர்களைக் காவல்துறை தாக்கியது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். மேலும் பலரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சென்னை மற்றும் பல நகரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ரஜினியைப் போராட்டத்துக்கு அழைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் மீம்களும் பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன. டிவிட்டரில் வீதிக்கு வாங்க ரஜினி என்றும், போராட வா ரஜினி தாத்தா என்றும் ஹேஷ்டேக் டிரெண்டாகியது. இந்த ஹேஷ்டேக்குகளை இணைய உடன்பிறப்புகள் பகிர்ந்து வந்தனர். அத்தோடு நில்லாமல் திமுக வைச் சேர்ந்த கவிஞரான மனுஷ்யபுத்திரன் ரஜினியை போராட்டத்துக்கு அழைக்கும் விதமாகக் நெடுங்கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

முகநூலில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை:-

வீதிக்கு வாங்க ரஜினி

முதல் ஆளாக இல்லாவிட்டாலும்

கடைசி ஆளாகவாவது.

நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்

கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்

தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்

ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன

இன்னும் நீங்கள்

அமைதியாக இருப்பது நல்லதல்ல

வீதிக்கு வாங்க ரஜினி

வெய்யில் குறைந்து

அந்தி சாய்ந்துவிட்டது

மாலை நடை மூப்புக்கு நல்லது

கடல் காற்று சுவாசத்திற்கு நல்லது

சாலையோர தேநீர் கடையில்

இஞ்சி டீ தலை சுற்றலுக்கு நல்லது

வீதிக்கு வாங்க ரஜினி

கதவைத்திற காற்றுவரட்டும்

என்றார் நித்தி

நீங்கள் ‘ கேட்’ டைத்திறங்கள்

‘மைக்’குகள் ‘ கேட்’ டிற்கு வெளியே

உங்களுக்காக தவமிருக்கின்றன

இஸ்லாமியர்களுக்கு

நீங்கள் சொன்னபடி ஒன்றல்ல

நூறு அடிகள் விழுந்துவிட்டன

இன்னும் ஏன் தயங்குகிறீர்கள்?

வீதிக்கு வாங்க ரஜினி

போராட்டக்காரர்களிடையே

சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள்

என்பதுதானே உங்கள் அடுத்த டயலாக்?

அதை எவ்வளவு நேரம் மனப்பாடம் செய்வீர்கள்?

ஆனால் அதை இந்த முறை

எப்படிச் சொல்வதெனக் குழம்புகிறீர்கள்

ஏனெனில் எந்தத் தீவிரவாதியும் புகமுடியாதபடி

போராடுகிறவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்

குல்லாபோட்ட தீவிரவாதிகள்

முக்காடிட்ட தீவிரவாதிகள்

வீதிக்கு வாங்க ரஜினி

நீங்கள் துடிப்பாக நடந்துவருவதைக்காண

எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்

உங்கள் துருப்பிடித்த மூளையைப்போலவே

உங்கள் துடிப்பும்

இந்த வயதிலும் மாறாமல்

அப்படியேதான் இருக்கிறது

எதையாவது பேசுங்கள்

அரசரின் ரத்தக்கறை படிந்த பூட்ஸ்களை

இன்னொருமுறை கழுவுங்கள்

நீங்கள் உங்கள் ரசிகனின் மாமிசத்தை

விற்பவர் என்பதையும்

உங்களையே எந்தக் கூச்சமும் இல்லாமல்

விற்றுக்கொள்பவர் என்பதையும

இன்னொருமுறை உலகிற்கு காட்டுங்கள்

வீதிக்கு வாங்க ரஜினி

வீதியில்தான் மக்கள் இருக்கிறார்கள்

வீதியில்தான் நீதி இருக்கிறது

வீதியில்தான் அன்பு இருக்கிறது

வீதியில்தான் சத்தியம் இருக்கிறது

–மனுஷ்ய புத்திரன்

author avatar
Parthipan K