சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

0
117

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

75 வயதான ருஷ்டி, மேற்கு நியூயார்க்கின் சௌடோகுவா நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்கு கலை சுதந்திரம் குறித்து உரை நிகழ்த்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஒரு நபர் மேடைக்கு விரைந்து அவர் மீது பாய்ந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பங்கேற்பாளர்கள் தரையில் விழுந்த ருஷ்டியை பிடிக்க உதவினார்கள். இந்த நிகழ்வில் பாதுகாப்பு வழங்கிய நியூயோர்க் மாநில பொலிஸ் படையினர் தாக்குதல் நடத்தியவரை கைது செய்தனர். நியூஜெர்சியில் உள்ள ஃபேர்வியூவைச் சேர்ந்த 24 வயதுடைய ஹாடி மாதர் என்ற நபர்தான் தாக்குதல் நடத்தியவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவர் நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டு வாங்கியவர் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் ருஷ்டியைத் தாக்கிய நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் வெறும் 2 பக்கங்களை மட்டுமே படித்துள்ளதாகக் கூறியுள்ளார். அப்படி இருக்கையில் எப்படி ருஷ்டி மீது அவருக்கு இவ்வளவு பெரிய அளவில் கோபம் ஏற்பட்டு அவரை தாக்கி இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.