சிவராத்திரியின்போது கண் விழிப்பதன் பலன் என்னவென்று தெரியுமா?

0
143

சிவராத்திரியன்று கண்விழித்து, விரதமிருந்து, இறைவனை வணங்கினால் முழுமையான இறைவனருள் கிடைக்கும் நினைத்த காரியம் நடைபெறும். விரதம் கடைபிடிப்பவர்கள் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் செய்து அதிகாலையில் குளித்துவிட்டு சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து 4 ஜாமம் வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும், மனம் சென்றபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிதென கருதப்படுகிறது.

நாள்தோறும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், கண்விழித்திருப்பதன் மூலமாக அந்த குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும், தெரிவிக்கப்படுகிறது. இப்படி உணவையும், உறக்கத்தையும், கட்டுப்படுத்துவதன் மூலமாக நாம் சாதாரண விழிப்பு நிலையையும் விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்புறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. நாள்தோறும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை தொடர்பாக உணர்வதேயில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.