மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா – 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது!

0
228
#image_title

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா!! 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தம்!!

ஹர ஹர சங்கர விண் அதிரும் பக்தி கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலகலமாக நடைபெற்ற தேரோட்டம். உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா  23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக இன்று காலை 6.30 மணியளவில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமியும் அம்மனும் கோவிலுக்குள் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி மற்றும் ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியிலும் எழுந்தருளிய பின்னர் மேஷ லக்கனத்தில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை  சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுவாமி சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். முன்னதாக கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய தேர் புறப்படாகி அதை தொடர்ந்து சிறிய தேரும் புறப்பாடாகி மாசி வீதிகளில் வலம் வந்தது.

சுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல அவற்றை தொடர்ந்து  முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்களும் சென்றது.

சுவாமி அம்மன் திருத்தேரை தொடர்ந்து இறுதியாக சண்டிகேசுவரர் சப்பரம் வலம்வந்தது. சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மதியம் 1 மணிக்கு வந்தடைந்தது.

மாசி வீதிகளில் பிரமாண்டமாக ஆடி அசைந்து வந்த மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் சங்கு முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சங்கர, மீனாட்சி சுந்தர,கல்யாண சுந்தர, கடம்பவன சுந்தர, என்ற பக்தி கோஷங்கள் விண் அதிரும் வகையில் முழக்கமிட்டபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். இதில் ஏராளமான பக்தர் தேர் வடம்பிடித்து இழுப்பதற்காக நேர்த்திகடன் இருந்து விரதம் இருந்து தேரை வடம்பிடித்து இழுத்துசென்றனர்.

தேரோட்ட திருவிழாவினை காண்பதற்காக மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் மாசி வீதிகள் முழுவதும் பக்தர்களின் தலைகளாவே காட்சியளித்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருத்தேரோட்டத்தின் போது மாசி வீதிகளில் உயரமான கட்டிடங்களிலும், மாடிகளில் நின்றும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.

வழிநெடுகிலும் சாதி, மத , கட்சி பேதமின்றி பல்வேறு தரப்பினரும், அன்னதானம் பந்தல் மற்றும் நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர்.

மாசி வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில் திருத்தேரானது விரைவாக நகர தொடங்கிய நிலையில் மாசி வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது ஆங்காங்கே பக்தர்கள் வீதிகளில் நின்றபண்டி சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு மாசி வீதிகள் மின் இணைப்பு துண்டிப்பட்டிருந்தது. இந்நிலையில் காலை 6.30 மணிக்கு தொடங்கிய திருத்தேரோட்டமானது மதியம்1 மணிக்கு கீழமாசி பகுதியில் உள்ள தேரடி பகுதிக்கு வந்தடைந்தது.

தேரினை வடம்பிடித்த இழுத்துவந்த இளைஞர்கள் உற்சாக ஆடிப்பாடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதனையடுத்து பக்தர்களின்மேல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு களைப்பு போக்கப்பட்டது.

6 மணி்நேரத்திற்கு பின்னர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட தேரின் முன்பாக கண்திருஷ்டி போக்கும் வகையில் பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவிலுக்குள் சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி எழுந்தருளினர்.

author avatar
Savitha