மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு! 

0
214
#image_title

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு! 

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் அதைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாகும். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதும் அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்குவதும் நடைபெறும் வைபவம் ஆகும். இந்த விழாவிற்கு தமிழகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண வருவார்கள்.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்று அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்ற திருவிழா தான் சித்திரை திருவிழா. கள்ளழகர் தனது தங்கையான மீனாட்சிக்கு சீர் செய்வதற்காக வைகை ஆற்றில் கால் வைக்கிறார் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கள்ளழகர் கால் வைப்பதால் தான் அந்த நதி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இந்த விழா மே மாதம் 8ஆம் தேதி வரை 16 நாட்கள் நடைபெற இருக்கிறது.

மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. மேலும் மே மாதம் 1ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே – 2ம் தேதி மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணமும், அதைத்தொடர்ந்து மே 3ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.  இதையடுத்து விழாவின் முக்கிய சிறப்பம்சமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5-ம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 நாட்கள் நடக்கும் இந்த விழாவினால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.