இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை!

0
65

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் ஆறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், தமிழ் பேசும் மக்கள் அதிக அளவில் வாழும் கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன் என்றும், கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ஆம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்.

ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் சமூகங்களுக்கிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தின் வாயிலாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

இதை தொடர்ந்து கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்க கூடிய மாவட்டங்களான கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தம்திட்டா, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு தைத் திருநாளான நாளை (ஜனவரி14) உள்ளூர் விடுமுறை அளித்து கேரளா அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

author avatar
Parthipan K