உலகின் கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் 216 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

0
397

உலகின் கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் 216 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

முல்லைத்தீவு முதல் வற்றாப்பளை அம்மன் கோவில் வரை இருந்த சுமார் 2000 சதுர மைல் பரப்பளவை கட்டி ஆண்ட தமிழினத்தின் கடைசி மன்னன் தான் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.

1621 ல் இலங்கை முழுவதும் கைப்பற்றிய போர்ச்சுகீசியர்களால் வன்னிப்பகுதியை மட்டும் கைப்பற்றவே முடியவில்லை. அடுத்து வந்த டச்சுக்காரர்களாலும் வன்னிய பகுதியை நெருங்க கூட முடிவில்லை . அன்னியர்க்கு கட்டுப்படாமல் தொடர்ந்து தனித்து சுதந்திரமாக இயங்கியதாலேயே வன்னிப் பகுதியை ” அடங்காப் பற்று ” என்று அழைத்தனர். இந்த மன்னர்கள் சோழர்களின் வழி வந்தவர்கள் என்பது ” யாழ்ப்பாண வைபவ மாலை ” என்ற நூல் மூலம் அறிய முடிகிறது…

1782ல் வன்னி பகுதியில் படையெடுத்த டச்சு படைதளபதி லூயி என்பவர் டச்சுப்படைகள் உலகம் முழுவதும் போரிட்டிருக்கிறது ஆனால் பண்டார வன்னியன் படை போன்று ஒரு படையைப் பார்த்ததில்லை என புகழ்ந்து கூறியுள்ளார்.

உலகத்தின் மிகப்பெரிய படையான பிரிட்டன் படைகளுக்கு சற்றும் தலை வணங்காமல் நேருக்கு நேர் மோதினார். ஈழ வரலாற்றில் ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்த நாள் 1803 ஆகஸ்டு 25 ஆம் அன்று தான் முல்லைத்தீவு படைதளத்தை தாக்கி ஆங்கில படைகளை நிர்மூலம் ஆக்கியதோடு 2 பீரங்கிகளையும் கைப்பற்றினார். அதன் பின்னர் வழக்கம் போல சூழ்ச்சி செய்து துரோகத்தின் துணைக்கொண்டு ஆங்கிலேயர்கள் இவரை வீழ்த்தினர்.

கவிசக்கரவர்த்தி கம்பன் எழுதிய சிலை எழுபது நூலில் குறிப்பிட்டுள்ளவாறு ” வன்னியர் ஏந்திய வில்லே வில் ” என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். உலகிலேயே எதிர்த்து போராடிய ஒரு வீரனுக்கு எதிரிகளால் நடுகல் வணக்கமும் , சிலையும் வைக்கப்பட்டது என்றால் அது இந்த பண்டார வன்னியனுக்கு மட்டும் தான்….

உலகையே மிரட்டிய ஆங்கிலேயர்களே வியந்து பார்த்து நடுக்கல் வணக்கம் செலுத்திய இலங்கையை ஆண்ட சோழர் படையின் கடைசி மாமன்னனான இந்த பண்டார வன்னியனின் வரலாற்றை சுட்டி காட்டியே இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்தான் என்று ஆணித்தரமாக உலகிற்கு ஆதாரத்தோடு நிறுவப்பட்டது.

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவன் மேதகு பிரபாகரனின் கனவு நாயகன் இந்த பண்டார வன்னியன்தான். அவரது போர் முறைகளை தான் விடுதலைப்புலிகள் கையில் எடுத்து போராடினர் குறிப்பாக கொரில்லா போர் முறையை இவரிடம் இருந்தே கற்றனர்.

அதனால் தான் விடுதலைப்புலிகள் தலைவன் மேதகு பிரபாகரன் கூட முள்ளிவாய்க்கால் போரின் இறுதி கட்டத்தில் ” வெற்றியோ தோல்வியோ நாம் விட்டுச் செல்லும் வாள் கூர்மையானதாக இருக்க வேண்டும். அன்று பண்டார வன்னியன் விட்டுச் சென்ற பணியைத் தான் நாம் கையில் எடுத்தோம் . நமக்கு பின்னாலும் இது தொடர வேண்டும் ” அதுவே நம் பணி என்று கூறினார்.

பண்டார வன்னியன் அவர்கள் பயன்படுத்திய கொடி

விடுதலைப் புலிகளை அழித்த பின் இலங்கை ராணுவம் செய்த முக்கிய செயல் சில நூற்றாண்டுக்கு முன் மரணமடைந்த மாவீரன் பண்டார வன்னியனின் நடுகல்லையும் , சிலையையும் வெறி கொண்டு உடைத்தார்கள் என்றால் இன்றும் எதிரிகள் தமிழினத்தின் அடையாளமாய் பண்டார வன்னியனைத் தான் பார்க்கிறார்கள் என்பதை உணர முடிகிறது…