மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி

0
108
Kasthuri
Kasthuri

மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி

சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு” என்று திமுக எம்பி ஆ.ராசாவை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.அதே போல அவருக்கு எதிராக, தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா விஷத்தை கக்கி வருகிறார் என்றும் கண்டனங்கள் பெருகி வருகின்றன.

Kasthuri
Kasthuri

திமுக எம்பியும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ஆ.ராசா அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி கொள்வது வழக்கமே. அந்தவகையில் தற்போது இந்துக்கள் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையாகி இணையத்தில் விவாதங்களாக கிளம்பி உள்ளது. இதை சரியாக பயன்படுத்திகொண்ட பாஜக தன்னுடைய கண்டனத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

அந்தவகையில் ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக பேசிய வீடியோ ஒன்றை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் ஆ.ராசா பேசும்போது, “உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது? நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால் நீ ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபசாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சவன், ஹிந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்.

 விபச்சாரியின் மகன்

எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத் தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திமுக.,வும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது..

தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

 நிறம் மாறுமோ?

இதை பார்த்த பாஜக தரப்பு இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. “திமுகவை சேர்ந்த எம்பி ஆ.ராசா, ஒரு சமூகத்தை தவறாக பேசி, மற்றவர்களை திருப்திப்படுவதற்காக பேசி கொண்டிருக்கிறார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இத்தகைய தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 நடிகை கஸ்தூரி

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகையும், அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலருமான கஸ்தூரியும் தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், “சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள்.

மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு” என்று அவர் காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

 கஸ்தூரிக்கு கேள்வி

கஸ்தூரி இப்படி பதிவிட்டதுமே, ஏராளமான திராவிட கட்சியினர் திரண்டு வந்துவிட்டனர்.. சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை என்றால் நடராஜர் கோவிலில் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டது எதற்காக? தமிழிசை அவர்களுக்கு பொன்னாடையை தூக்கி எறிந்தது எதற்காக? என்று கஸ்தூரியிடம் திமுக ஆதரவாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சரி, சூத்திரர்கள் இழிவானவர்கள் அல்ல என்று சொல்லும் நீங்கள் ஒரு முறை உங்களை “கஸ்தூரி சங்கர் ஒரு சூத்திரி தான்” என்று நீங்களே சொல்லி கொள்ளுங்கள் பார்க்கலாம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில், ஆ.ராசா பேசிய பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் இணையத்தில் பதிவாகி வருகிறது. ஆ.ராசா இப்படி ஹிந்துக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது சரியா? அவரது பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?’ வழக்கம்போல், ஸ்டாலின் இதற்கும் மவுனம் காக்கப் போகிறாரா? ஹிந்துக்களின் ஓட்டு மட்டும் எதிர்பார்க்கும் திமுக, இந்துக்கள் மீது அவதூறு பரப்புபவர்களை கண்டிப்பதே இல்லையே ஏன்? மாற்று மதத்தினர் மீது அவதூறு பேசினால் கைது செய்யும் திமுக அரசு இந்துக்களை அவதூறாக பேசிய ஆ.ராசாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 ஹிந்துக்கள்

இந்நிலையில், தன்னுடைய பேச்சு எல்லா பக்கமும் இப்படி கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆ.ராசா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், ‛சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத ஹிந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி ஹிந்துக்களுக்கு எதிரியாகும்!’ என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பதிவை பார்த்த பாஜகவினர் மற்றும் இந்து ஆதரவாளர்கள் இதற்கும் தக்கபதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.