வருமான வரித்துறை வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் விடுதலை!

0
62

வருமான வரித்துறை வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரத்தை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.

முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவருடைய மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோர் முட்டுக்காடு பகுதியில் இருக்கின்ற தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அக்கினி எஸ்டேட் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய் என்ற வகையிலே 2015ஆம் ஆண்டு விற்பனை செய்து இருக்கிறார்கள்.

நில விற்பனை மூலமாக தனக்கு கிடைத்த 7.37 கோடி பணத்தை வருமானவரிக் கணக்கில் காட்டவில்லை என்று கார்த்தி சிதம்பரம் ஸ்ரீநிதி உள்ளிட்டோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018 ஆம் வருடம் வழக்குப்பதிவு செய்து இருந்தது. அது தொடர்பான வழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்து இருந்தார்கள். இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணை செய்யப்பட்டது கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வருமான மதிப்பீட்டு நடைமுறைகளை இரண்டு பேரும் முடிக்கும் முன்பே அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாக வாதம் செய்தார். ஆனால் இருவரையும் வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று வருமான வரித்துறை வலியுறுத்தி இருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார் வருமானம் மதிப்பீட்டு நடைமுறைகளை கார்த்தி சிதம்பரமும் ஸ்ரீநிதி அவர்களும் முடிப்பதற்கு முன்பே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதோடு வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரமும் அவருடைய மனைவியும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று உத்தரவிட்டார்.