7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை

0
87

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் பள்ளிகல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க திட்டமிட்டு வருகிறது.

சில பள்ளிகளில் கடந்த மாத இறுதியிலிருந்தே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த துவங்கியுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவது குறித்து இன்னும் எந்த விதிமுறையும் அறிவிக்காத நிலையில் பள்ளிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து இதனை பின்பற்றி வருகிறது.

இந்நிலையில் கர்னாடக மாநிலத்தில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்ட முடிவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “கர்நாடக அரசு கடந்த ஒரு வாரமாக, கல்வித்துறை நிபுணர்கள், மனநல நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் போன்றோருடன் பள்ளிகளைத் திறப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் பாடத்தைக் கவனிப்பது போல் ஆன்லைனில் கற்க முடியாது. அதைப் போல் மாணவர்களின் திறன், நிலை பற்றி ஆசிரியர்களால் அறிய முடியாது. தற்போது வரை அனைத்து மாணவர்களிடமும் ஆன்லைனில் கற்கும் அளவுக்கு வசதிகள் மற்றும் தொழில்நுட்பமோ கிடையாது. எனவே ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தத் தடை விதிக்கபப்டுகிறது.

இதனால் அரசு அறிவிக்கும் வரை மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த ஆண்டு கல்விக்கட்டணத்தை கண்டிப்பாக உயர்த்தக் கூடாது. ஏற்கனவே அறிவித்தபடி வரும் 25ம் தேதி SSLC பொதுத் தேர்வுகள் தொடங்கும்” என தெரிவித்தார்.

author avatar
Parthipan K