கன்னியாகுமரி தொகுதி எம்.பி. உடல்நிலை கவலைக்கிடம்… சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

0
56

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோய்த் தொற்றானது சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என யாரையும் விட்டுவைப்பதில்லை. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் இது குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி. வசந்தகுமாருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பபட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது எம்.பி. வசந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் தான் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக தான் இருக்கிறது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை விரைவில் வீடு திரும்புவார் என்றும் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K