கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

0
78

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது!

தமிழ்நாட்டின் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மூன்று கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தலை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கம்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையிலான போலீசார் கம்பம் மெட்டு சாலையில் 18வது கால்வாயின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் என மூவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். இதனை அடுத்து அவர்களை சோதனை இட்டதில் அவர்கள் வைத்திருந்த பையில் மூன்று கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை மேலும் விசாரித்ததில் கம்பம் குரங்குமாயன் தெருவை சார்ந்த பாண்டியராஜன் என்பவரது மனைவி லதா (வயது 40 )அவரது மகள் அபர்ணா (வயது 23) மற்றும், மகன் ஜெயக்குமார் (வயது 19)என்பதும் அவர்கள் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட லதா மற்றும் ஜெயக்குமார் மீது ஏற்கனவே 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.