ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன்

0
99
Kamalhaasan-News4 Tamil Online Tamil News
Kamalhaasan-News4 Tamil Online Tamil News

ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தமிழக அரசிடம் கேள்வியெழுப்பிய கமல்ஹாசன்

கொரோனா வைரசின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் தமிழக அரசிற்கு வருவாய் ஆதாரமாக உள்ள டாஸ்மாக் நிறுவனமும் அடங்கும்.

இந்நிலையில் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை காரணமாக காட்டி தமிழகத்திலும் சென்னையை தவிற மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து அரசியல் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் #தாங்குமா தமிழகம் என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது.
இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இந்த டேக்கை பயன்படுத்தி ட்விட் செய்து உள்ளார்

அவர் வெளியிட்டு உள்ள அந்த ட்விட்டர் பதிவில்
“மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
Ammasi Manickam