அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் இருப்பேன்:கமலின் முக்கிய அறிவிப்பு !
நடிகர் கமல்ஹாசன் இப்போது முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டாலும் இன்னமும் சினிமா மீதான அவரது ஆர்வம் குறையவில்லை என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது 5 வயதில் இருந்து சினிமாவே உயிர்மூச்சாக வாழ்ந்து வருபவர். இடையில் அதிமுக அமைச்சர்களால் ஏற்பட்ட விரக்தியால் துணிந்து அரசியல் கட்சி ஆரம்பித்து பாராளுமன்றத் தேர்தலையும் சந்தித்து விட்டார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமான முனைப்பில் இருந்து வரும் அவர் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அதன் பிறகு அவரை சினிமாவில் பார்க்க முடியாது என சொல்லப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் சினிமாவின் வேறொரு தளத்தில் அவர் காலடி எடுத்து வைத்துள்ளார். ஓடிடி எனப்படும் ஸ்ட்ரிமிங் இணையதளங்கள்தான் சினிமாவின் எதிர்காலம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் அதில் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க உள்ளார். இது சமம்ந்தமான அறிவிப்பை இன்று அவர் டிவிட்டரில் வெளியிட்டார். இதற்காக பனிஜாய் ஏஷியா என்ற நிறுவனத்தோடு கைகோர்த்துள்ளார்.
இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ஸ்ட்ரீமிங் தளங்களில் முதல் முயற்சிகளில் ஒன்றாக, பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து, நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்தில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் நான் என்றும் நம்பிக்கையுடையவன். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி’ என அறிவித்துள்ளார். இதனால் கமல் தொடர்ந்து சினிமாவில் இருப்பார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.