நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!!

0
70

நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!!

கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன், சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டன. வெளிமாவட்டங்களில் உள்ள வங்கி பணியாளர், நகை பரிசோதகர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை இறுதி செய்ய துணை பதிவாளர் தலைமையில் ஒவ்வொரு சரகத்திற்கும் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுதான் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.

அந்த வகையில், ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமிற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மற்றும் ஒரே ரேஷன் அட்டை எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமிற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் ஆகியவை ஆராய்ந்து நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியில்லாதவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டும்.

31.3.2021-க்கு பிறகு வழங்கப்பட்ட பொது நகைக்கடன், நகைகள் இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக்கடன், போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன், கடன் தள்ளுபடி விருப்பம் இல்லாதவர்களின் நகைக்கடன், பிற மாநில முகவரிகளைக் கொண்ட ஆதார் அட்டையில் பெற்ற நகைக்கடன், பிற மாநிலங்கள் வழங்கிய ரேஷன் அட்டையில் பெற்ற நகைக்கடன் ஆகியவை தள்ளுபடிக்கு தகுதியானவை அல்ல.

தகுதி பெற்றவர்களின் விவரங்களில் சந்தேகம் எழுந்தால் அவர்களை தகுதியற்றவர்களின் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும். தகுதி பெற்றோர் மற்றும் தகுதி பெறாதோரின் பட்டியலை பதிவாளர் அலுவலகத்திற்கு 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

author avatar
Parthipan K