ஜெர்சி பசு நிகழ்த்திய அதிசயம்!

0
122

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருபவர் சுதாகர். இவர் கால்நடை பண்ணை ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் குதிரை, நாய், கோழி மற்றும் விலை உயர்ந்த பசுக்களையும் வளர்த்து வருகிறார்.

இந்த கால்நடை பண்ணையில் உள்ள ஜெர்சி இன பசு ஒன்று முதல் நாளில் ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. பசுவும், கன்றுக்குட்டியும் நலமுடன் இருப்பதை பார்த்த சுதாகர் வழக்கம்போல பசுவிற்கு செய்ய வேண்டிய பணிகளை செய்து வந்தார். ஆனால், அவர் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் மறுநாளும் ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது அந்த ஜெர்சி பசு. இதைப் பார்த்த சுதாகர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

பொதுவாக பசு ஒரு கன்றுக்குட்டியை ஈன்ற பிறகு, இன்னொரு கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இருந்தால் 2 மணி நேரத்தில் அது இறந்துவிடும். ஆனால் அந்த ஜெர்சி பசு, 24 மணி நேரத்திற்கு பிறகு இன்னொரு கன்றுக்குட்டியை உயிருடன் ஈன்று அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது.

பசுவும், கன்றுக்குட்டியும் நலமுடன் இருப்பதாக சுதாகர் தெரிவித்துள்ளார். மேலும் பசுவும், கன்றுக்குட்டியும் உள்ள புகைப்படம் இணையதளத்தில் பரவி பார்க்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது.

author avatar
Parthipan K