இடிமின்னலுடன் மழை பெய்ய போகிறது! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
75

இடிமின்னலுடன் மழை பெய்ய போகிறது! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மார்ச் 18) தமிழகம் மற்றும் புதுவை காரைகாலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோல் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமையன்றும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

நேற்று காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19-ந் தேதி காலை நிலவக்கூடும்.

இதனால் இன்றும் மற்றும் நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

author avatar
Parthipan K