இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்! 

0
87

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்! 

தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் மட்டத்துக்கும் பெரும் இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடுத்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை அகற்றுவதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் மரங்களை அகற்றுவதற்கு அரசு சாரா அமைப்புகள் எதுவும் முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு இடங்களில் பெய்த பருவமழை காரணமாக இயந்திரங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மரங்களை அகற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னேற்றம் காட்டப்படும். அதனால் வழக்கை தள்ளி வைக்குமாறு தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற பிப்ரவரி- 14 ஆம் தேதி தள்ளி வைப்பதாகவும் தெரிவித்தனர். சீமை கருவேல மரங்கள் ஒரு கொடிய நோய் போல் பரவி வருவதால் அதன் தாக்கத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் அனைத்து மரங்களையும் குறிப்பிட்ட நாட்களில் அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் என நீதிபதிகள் அரசுக்கு யோசனை கூறினர்.