தேமுதிகவின் தலைவராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்? பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

0
147

கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் 2006ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டு விருதாச்சலம் சட்டசபை தொகுதியில் விஜயகாந்த் அபார வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து வந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுகவை பின்னுக்குத்தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்தார் விஜயகாந்த்.

அதன்பிறகு கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட அதிமுக செய்யும் தவறுகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டி அதிமுகவிற்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்தார். அதோடு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும், விஜயகாந்த் அவர்களுக்கும், இருந்த நட்பு பாலம் சற்று விரிசலடைய தொடங்கியது.

இதன் பிறகு விஜயகாந்த் அவர்களுக்கு தொண்டையில் ஏற்பட்ட தைராய்டு பிரச்சனையின் காரணமாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரால் சரிவர எந்த மேடைகளிலும் பேசமுடியவில்லை.

அதோடு அதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைத்து மேடைகளிலும் தோன்றினாலும் கூட பொதுமக்களிடம் பெரிதாக எதுவும் பேசாமல் தான் இருந்து வந்தார் விஜயகாந்த்.

இதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்காக அமெரிக்காவிற்கு சென்று வந்தார், தற்போது அவர் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

இந்த நிலையில், கட்சியின் பொறுப்பை முழுவதுமாக தன் கைக்குள் கொண்டு வரவேண்டும் என நினைத்து அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் அந்த கட்சியின் பொருளாளராக நியமனம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சென்னை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தற்போதைய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு பிரேமலதா தலைவராக வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட செயலாளர்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் பிரேமலதாவை தலைவராகவோ அல்லது செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல அதிமுக அரசு என்றாலும் மின்வெட்டு தான் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, விவசாயம் சார்ந்த தொழில்கள் வியாபாரம் உள்ளிட்டவை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.

தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி பொதுமக்களையும், மாணவர்களையும், மின்வெட்டிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போதைய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் நூல் விலை உயர்வு காரணமாக, ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் பசியால் அவதிப்படுகிறார்கள்.

பருத்தி, ஏற்றுமதி குறித்த உயர்வை நீக்கி தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும். இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுதான் சரியான நேரம் ,மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் கொடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும்.

அதோடு தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றவும், பெட்ரோல், டீசல் என அனைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலவிதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.