கத்துக்குட்டியிடம் விழுந்த பஞ்சாப் அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி!

0
71

10 அணிகளுக்கிடையிலான 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது.சென்ற மாதம் தொடங்கிய இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புனேயில் நேற்று நடந்த 42 வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

தொடக்க வீரர்களாக கே எல் ராகுல், குயின்டன் டி காக், உள்ளிட்டோர் களமிறங்கினர். நடப்பு தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் இந்த முறை 6 ரன்களில் ஆட்டமிழந்த ஏமாற்றம் வழங்கினார்.

அதன்பிறகு தீபக் ஹூடா, டி.காக் உள்ளிட்டோர் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் டிகாக் 46 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து தீபக் ஹூடா 36 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர்.

இதன் காரணமாக, லக்னோ அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. கடைசி கட்டத்தில் ஹோல்டர், சமீரா ஜோடி சிக்சர்களை அடித்து அதிரடி காட்டினர்.

கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் களம் புகுந்தார், அதன்பிறகு தவான் 15 பந்துகளைச் சந்தித்த சூழ்நிலையில், 5 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ராஜபக்சா 9 ரன்களில் ஆட்டமிழந்தார், அதன்பிறகு பஞ்சாப் அணியின் தொடர்ந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அடுத்தடுத்து பஞ்சாப் அணியின் வீரர்கள் ஆட்டமிழக்க தொடங்கினர். ஒரு முனையில் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக, பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வந்தது. கடைசி 4 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்ட சூழ்நிலையில், ரபாடா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆவேஸ்கான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய ரிஷி தவான் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்ட கடைசி 4 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த 4 பந்தில் ரன் எதுவும் சேர்க்க முடியவில்லை.

கடைசியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது. லக்னோ அணி சார்பில் மொஹ்சின் கான் 3 விக்கெட்டுகளும், சமீரா, க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.

இதன் மூலமாக லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6வது வெற்றியை பெற்றிருக்கிறது.