புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

0
80

ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது மட்டுமே சாதனை என்று முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்காமல் சென்னை மாநகரில் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார்.

கணக்கு எடுக்கின்றோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேளாண் பொருட்கள் சேதம் வீடு சேதம் உடைமைகள் இழப்பு ஆகியவை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண நிதியையும் வழங்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர்.

தொடர்ந்து மூன்றாவது தினமாக சென்னை மாநகரத்தில் புயல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து பேசி வருவதிலிருந்து அதிமுக அரசு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் சீரமைக்கும் இந்த குறைந்தபட்ச மழையை கூட தாங்க இயலாமல் மக்களை தவிக்க விட்டு இருப்பதை காண முடிகின்றது தெருக்களிலும் வீடுகளிலும் புகுந்து இருக்கும் மழைநீர் இன்னும் பல இடங்களில் வடியவே இல்லை சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர் போன்ற இடங்களில் புகுந்த தண்ணீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை கலைஞர் கருணாநிதி நகர் அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய வட சென்னை பகுதிகளில் ஏன் என்னுடைய கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கூட பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவும் கிடையாது வெளியேற்றப்படவும் கிடையாது.

புயலுக்கு முன்னரே நடவடிக்கை எடுத்த காரணத்தால் பாதிப்புகள் குறைந்து விட்டது என்று தெரிவிக்கும் முதல்வரும் அமைச்சர்களும் இன்னும் தேங்கி இருக்கும் தண்ணீரைப் பற்றி கவலைப்படாமல் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பது மட்டுமே நிவாரணப் பணிகளில் சாதனை என்று செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கின்றது. இதுவரையில் சென்னை கடலூர் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர் மழை வெள்ளத்திற்கும் புயலுக்கும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என செய்தி வந்து கொண்டிருக்கின்றது இந்து ஆங்கில பத்திரிக்கையில் கூட மழை வெள்ளம் எவ்வாறு சென்னை புறநகர் மக்களின் இரவு தூக்கத்தை கெடுத்திருக்கின்றது என்பதை வெளியிட்டும் கூட அரசின் சார்பாக விளம்பரத்திற்காக பேட்டி கொடுப்பதை நிறுத்தி வைத்துவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு யாரும் தயாராக இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவான சேதம் தான் என்று தெரிவிக்கும் முதல்வரால் அந்த குறைந்த சேதம் என்ன என்பதை கூட உடனடியாக தெரிவிக்க இயலாமல் இனிமேல்தான் கணக்கு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றார். கஜா புயலில் எவ்வாறு கணக்கெடுக்கப்பட்டது என்பதை இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நாசம் அடைந்து விட்டது என்றாலும் கூட பயிர் காப்பீடு செய்யாதவர்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கின்றார் அதையாவது முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கு அரசு முன் வருமா அல்லது வழக்கம் போல அதிலும் முறைகேடுகளுக்கு வழி வகை செய்யுமா என்பது தான் விவசாயிகளின் மனதில் இருக்கின்ற கேள்வி இந்தக் கேள்வியை ஏற்கனவே அனுபவித்த பழைய அனுபவம் காரணமாக மக்கள் மனதில் நிறுத்தி இருக்கிறார்கள்.

ஆகவே குடியிருப்புகளுக்குள் தண்ணீர் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவதிக்கு ஆளாகி நீர் சூழ்ந்த பகுதிகளில் குடிநீர் கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக சென்னை மாநகரில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் எதிர்கட்சி தலைவர் தெரிவித்து இருக்கின்றார்.