இலங்கையில் நடந்த வன்முறை சம்பவம்! ராஜபக்சேவுக்கு கிடுக்குப்பிடி போட்ட காவல்துறையினர்!

0
60

கடந்த 2009ஆம் வருடம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்குற்றம் தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்து வந்தனர்.

ஆனால் ராஜபக்சவிற்கு உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும், இருந்துவந்த செல்வாக்கு காரணமாக, அந்த போர்க்குற்றம் மீது விசாரணை நடத்தப்படாமல் இருந்துவருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே மக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கினர். அதோடு பல அரசியல்வாதிகள் பொதுமக்களால் தாக்கப்பட்டனர்.

இந்த பரபரப்புக்கு நடுவே இலங்கையின் பிரதமராக பதவி வகித்து வந்த ராஜபக்சே பொதுமக்களின் வற்புறுத்தல் காரணமாக, திடீரென்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அவர் திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவானார்.

இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் அவருடைய வீட்டை தீக்கிரையாக்கினார்கள். இந்தநிலையில், இலங்கையில் மே மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற வன்முறை குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதற்கு முன்னால் அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக, நாடு முழுவதும் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

இதில் 10 பேர் வரை பலியானார்கள். இந்த வன்முறை குறித்து 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொழும்பிலுள்ள இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி காவல்துறையினர் 5 மணிநேரம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சவிடம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.