வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்

0
81
Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today
Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்

 

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் மூலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாக வன்னிய சமுதாயத்துடன் சேர்த்து மேலும் 108 சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இதில் வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் பிரதிநிதித்துவம்: ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையம் அமைக்க வேண்டும்!” என்று கேட்டு கொண்டுள்ளார்.மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது.

 

மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டுமானால், அந்த சமுதாயத்திற்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அது தான் சமூக நீதியின் அடிப்படை ஆகும். ஆனால், வன்னியர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தமிழக ஆட்சியாளர்கள் கடந்த 40 ஆண்டுகளாக காதில் வாங்காமல் கடந்து செல்வது பெரும் வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் என்றால் வன்னியர்கள் தான். தமிழ்நாட்டு மக்கள்தொகையில் வன்னியர்களின் பங்கு 25 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். ஆனால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாக இருந்ததால் தான், 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் சாலைமறியல் போராட்டத்திற்குப் பிறகு 1989-ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக, வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காது என்று எதிர்ப்பு தெரிவித்தும், அதை அப்போதைய ஆட்சியாளர்கள் பொருட்படுத்தாமல் எங்கள் மீது திணித்தனர். அதன்பின் 31 ஆண்டுகள் ஆகியும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படி பல முறை கோரியும் அதை கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை. காரணம்…. வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியும், துரோகமும் அம்பலமாகி விடும் என்று அஞ்சினார்கள். தகவல் அறியும் உரிமைப்படி இந்த விவரங்கள் கோரப்பட்டும் அவை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு சமுதாயமும் இட ஒதுக்கீட்டால் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளன என்பதை அறிய இவ்விவரங்கள் மிகவும் அவசியம். ஆனாலும், அவற்றை அரசுகள் மூடி மறைக்கின்றன.

 

2019-ஆம் ஆண்டில் அதிமுகவும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்த போது. 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் முதன்மையானது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அதன்பிறகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஓரிரு முறை நானும், பாட்டாளி மக்கள் கட்சிக் குழுவினரும் நேரில் சந்தித்த போது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், இன்று வரை அக்கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் பரிசீலனைக்குக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.

 

அண்மையில் இணையவழியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களின் போதும், சுக்கா… மிளகா…. சமூகநீதி? நூல் வெளியீட்டு விழாவின் போதும் வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்தும், தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் குறித்தும் நான் வலியுறுத்தினேன். ஆனால், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

 

ஆரோக்கியமான சமூகநீதி என்பது அதன் விளைவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து, அதனடிப்படையில் தேவையான மாற்றங்களை செய்வது தான். 1969-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்ட சட்டநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான சமூகநீதி கிடைத்துள்ளதா? என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆராய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைத்து சமுதாயங்களும் பயனடைந்துள்ளனவா? என்பதை ஆராய நீதிபதி ரோகிணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் இறுதி பரிந்துரை அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

 

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யவும், அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யவும் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதற்குக் காரணம் இட ஒதுக்கீட்டு குளறுபடிகளால் பாதிக்கப் பட்டது பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் என்ற உண்மை அம்பலமாகி விடும் என்ற ஐயம் தான்.

தமிழ்நாட்டில் 20% இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக 21 உயிர்களை இழந்தது உள்ளிட்ட ஏராளமான தியாகங்களை செய்தவர்கள் நாங்கள். அவ்வாறு போராடிப் பெற்ற சமூகநீதியில் யார், யாருக்கு எவ்வளவு பலன் கிடைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. எனவே மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 19% இட ஒதுக்கீடு தவிர, மீதமுள்ள 81 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

 

இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அந்த ஆணையம் அதன் அறிக்கையை திசம்பருக்குள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பு உள்ளிட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை செய்ய அரசு தயங்கினால் பாட்டாளி மக்களைத் திரட்டி, தொடர் சாலைமறியலை விட கடுமையான போராட்டத்தை நடத்துவதைத் வேறு வழியில்லை என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

author avatar
Ammasi Manickam