காஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!!
காஷ்மீரில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உதவ வேண்டும் என்று அவரது குடும்பம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், ராகுல் என்ற மகனும் உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் உயிரிழந்த இராமச்சந்திரன் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குடும்பத்துடன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இராமச்சந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து திரும்பியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து சென்றவர் அனைவரிடமும் நன்றாக பேசிவிட்டு நலமுடன்தான் சென்றிருக்கிறார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.