எப்போதும் இதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது! மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!

0
76

நாட்டில் நோய்தொற்று நிலவரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பதிலளித்து உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நாட்டில் புதிய வகை நோய்த்தொற்றை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நோய்த்தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே மத்திய அரசு ஆரம்பித்துவிட்டது, புதிய வகை நோய் தொற்றை எதிர்த்து போரிட இந்தியா எப்போதுமே தயாராக இருக்கிறது. இந்த நோய் தொற்று குறித்து மாநிலங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது என கூறியிருக்கிறார்.

இந்த புதிய வகை நோய் தொற்று குறித்து எப்படிப்பட்ட நெருக்கடியையும் சமாளிக்க மருந்து மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றன. அதோடு 48,000 வெண்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மாதத்திற்கு 45 கோடி என்ற அளவுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் 80 சதவீத பயனாளிகள் முதல் தவணைத் தடுப்பூசியும், 50 சதவீதத்தினர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

இயற்கை பேரிடர் குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் பதில் தெரிவித்த மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் ராஜேந்திர சிங் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இயற்கை பேரிடர் காரணமாக, உயிரிழந்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார். கங்கை நதி தூய்மை திட்டத்தின் கீழ் இதுவரை 30 ஆயிரத்து 780 கோடி மதிப்பிலான 357 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், இதில் 178 திட்டங்கள் முடிவடைந்து செயல்பட்டு வருவதாகவும், கூறினார்.

12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவையில் நேற்று முடங்கிப் போனது. அந்த விதத்தில் மாலை 5 மணி வரையில் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மக்களவையில் கல்வித்துறை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் தெரிவித்த இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து கடந்த 2018 ஆம் வருடம் முதல் 2690 புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் தொடர்புடைய சுமார் 1300 பேர் தண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதேபோல கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி ஒன்றுக்கு பதில் தெரிவித்தபோது, ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாகவும், இதில் 24 பேர் தலித் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும், கூறியிருக்கிறார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உயிரியல் பன்முகத் தன்மை திருத்த சட்ட மசோதா மற்றும் மத்தியஸ்தம் உள்ளிட்டவற்றை நாடாளுமன்றக் கூட்டுக் குழு மற்றும் சட்ட அமைச்சக நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.