உக்ரைன் விவகாரம் வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா! பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

0
69

உலகம் முழுவதும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய பதற்றம் உண்டாகி வருகின்றது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்களிப்பை இந்தியா புறக்கணித்திருக்கிறது. சுமார் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் என்ற பதற்றம் எழுந்திருக்கிறது.

ரஷ்யா இந்த பதற்றத்தை தணிக்கும் பொருட்டு நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற சூழ்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறியது.

இருந்தாலும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில், ரஷ்யா இந்த ஆலோசனை கூட்டம் நடத்த தேவையில்லை என மறுத்தது. அதோடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யா வலியுறுத்தியது.

இதன் அடுத்த கட்டமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா, ஆலோசனை கூட்டத்திற்கு எதிராகவும் மற்றும் அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், அயர்லாந்து, பிரேசில், மெக்சிகோ, உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஆதரவாகவும், வாக்களித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்தியா, கென்யா,  உள்ளிட்டவை வாக்களிப்பை புறக்கணித்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும், இடையே உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் நிலவி வருகின்ற சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டிருக்கின்றதா? என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இந்தியாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட உறவு இருப்பதாகவும், இதன் காரணமாக, தனி தகுதி பாடுகளுடன் நிலையாக இருப்போம் என்று பதில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மேலும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.