திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
78

தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்து சேர்ந்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக தஞ்சை சென்ற அவர் தஞ்சையில் இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு அதன் பிறகு கார் மூலமாக மதியம் திருச்சிக்கு வருகை தருகிறார்.

திருச்சி மன்னார்புரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மாலை 4 மணியளவில் கார்முலமாக புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல் சாலையில் இருக்கின்ற கேர் கல்லூரி வளாகத்திற்கு வருகை தருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த விழாவில் திருச்சி மாநகரில் நவீனமயமாக்கப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், கால்நடை மருந்தக கட்டிடங்கள் மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்கு பொருளுடன் அழகுபடுத்தப்பட்ட பணிகள், தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை பணிகள், மருங்காபுரி மாற்றத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், மன்னார்புரம் மண் பரிசோதனை ஆய்வகம், தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பாக மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் ஓடை துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், உள்ளிட்ட 153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

அத்துடன் அவர் பஞ்சப்பூரில் புதிதாக அமைய இருக்கின்ற ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுகிறார், அதற்காக முதல்கட்டமாக 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன்28 அரசு துறைகளின் மூலமாக 45 ஆயிரத்து 344 பயனர்களுக்கு 327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார். இந்த விழாவில் ஒட்டுமொத்தமாக 1084 கொடியே 80 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவு பெற்ற பணிகளை ஆரம்பித்து வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதனைத்தொடர்ந்து பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய இருக்கின்ற இடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட இருக்கிறார். அதன் பிறகு தனி விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்ல இருக்கின்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருவதை முன்னிட்டு திருச்சி, திண்டுக்கல், சாலையில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரும் வாகனங்கள் எல்லாம் மணப்பாறை, விராலிமலை மூலமாக திருச்சி ,மன்னார்புரம் வந்து செல்ல மாநகர காவல் துறையினர் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறார்கள் அதோடு முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.