அதிமுக ஆட்சியில் போலி சாராயம் குடித்து யாரும் சாகவில்லை சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ளனர்-தங்கமணி விளக்கம்!!

0
138
#image_title

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்க வில்லை, சானிடைசர் குடித்தே உயிரிழந்துள்ளனர் – முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம்.

நாமக்கல்லில் அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்கவில்லை என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்கை விளக்க குறிப்பிலேயே தெரிவித்த நிலையில், தற்போது உயர்கல்வி துறை அமைச்சரும் மதுவிலக்கு துறை அமைச்சரும் கடந்த அதிமுக ஆட்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்து விட்டதாக முன்னுக்கு முரணாக பேசி வருவதாகவும் அப்போது சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறியது பொய்யான அறிக்கையா.? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட கள்ள சாராயம் குடித்து யாரும் உயிரிழக்கவில்லை, சானிடைசர் குடித்தே உயிரிழந்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு இல்லை எனவும் மின்வெட்டு வேறு மின்தடை வேறு என அமைச்சர் செந்தில் பாலாஜி புது விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட துணை மின் நிலையங்களை தற்போது திறந்து வைத்து விட்டு தங்களது ஆட்சியில் கொண்டு வந்தது போல் திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மின்னகத்திற்கு தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் மின் உற்பத்தியை பெருக்க கடந்த 2 ஆண்டுகள் திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ள அதிமுகவை சேர்ந்தவரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தலைவரை கூட்டங்களில் மரியாதை குறைவாக தலைவர் இருக்கையை திமுக துணை தலைவர் அபகரித்து அவமரியாதையாக நடத்துவதாகவும் இதன்மீது மாவட்ட நிர்வாகமும் தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஜேடர்பாளையத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையினர் முறையாக விசாரிக்காததே காரணம் எனவும் முறையாக விசாரித்து இருந்தால் வன்முறை சம்பவங்கள் நடைப்பெற்று இருக்காது எனவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

author avatar
Savitha