பட்டியலின பழங்குடியின பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் அந்த குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டிருக்கும் – மருத்துவர் ராமதாஸ் 

0
87
Dr Ramadoss
Dr Ramadoss

பட்டியலின பழங்குடியின பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் அந்த குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டிருக்கும் – மருத்துவர் ராமதாஸ்

பட்டியலின, பழங்குடியின பின்னடைவு காலிப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது. இந்த பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர்தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது.

அரசுத் துறைகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 10,402 பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. தேவையற்ற இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும்.

அதை செய்யத் தவறியது சமூக அநீதி. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.