வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஸ்டாலினுக்கு சூடு வைத்த முதலமைச்சர்!

0
87

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் உரையாற்றும் போது, திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தி இருக்கின்றார். அவர் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய டெண்டர் ஓர் ஆண்டிற்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு எப்படி இந்த டெண்டரில் ஊழல் செய்ய இயலும். ஊழல் குற்றச்சாட்டு குறித்து தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் சந்திப்போம், பேசுவோம், என நான் தெரிவித்தேன். அதற்கு நீதிமன்றத்திலே வழக்கு இருக்கின்றது வாபஸ் வாங்கினால் வருகின்றோம் என்று தெரிவிக்கிறார். இது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஒரு செயல் என்று தெரிவித்ததை போல, நீங்கள் வாருங்கள், பேசுங்கள் எது தவறு எது சரி என்று தெரிவியுங்கள்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் மூலமாக பொதுவாழ்வில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த யார் யாரெல்லாம் டெண்டர் எடுக்கக்கூடாது, அரசுடைய சலுகைகளை அனுபவிக்கக் கூடாது, என ஒரு பட்டியலை மத்திய அரசிடம் வாங்கினார். அதைத் தெரிந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். ஏனென்றால் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒன்றுமே தெரியாது. எதுவுமே தெரியாமல் நாங்கள் டெண்டர் கொடுத்தது தவறு என தெரிவித்துக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். சட்டரீதியாக நாங்கள் செயல்படுகின்றோம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான தகவலை ஸ்டாலின் பரப்பி வருகிறார். நாங்கள் கொடுத்த இ டெண்டர் ஆனாலும் திமுக ஆட்சியிலே ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். டெண்டர் நோட்டீஸ் யாருக்கு கொடுக்கப்படுகின்றது. அவர்கள் மட்டுமே அதில் பங்கேற்க இயலும் யார் வேண்டுமானாலும் பங்கு வரக்கூடிய எங்களுடைய முறை சிறந்ததா? அல்லது குறிப்பிட்டவர்கள் மட்டுமே பங்கு பெறும் அவர்களுடைய முறை சிறந்ததா? மக்களாகிய நீங்களே சிந்தியுங்கள்.

ஸ்டாலின் குடும்பத்தில் 58 உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருக்கின்றார். கருணாநிதி சென்னை வந்தபோது திருட்டு ரயில் ஏறி வந்தார் என்பதை நாங்கள் தெரிவிக்கவில்லை. கவிஞர் கண்ணதாசன் தெரிவித்திருக்கிறார். ஆனால் நான் வைத்திருக்கும் சொத்து ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி மூன்றாம் ஆண்டிலேயே எங்கள் தாத்தா வைத்திருந்த சொத்து. எங்கள் பரம்பரை விவசாய பரம்பரை. குறை சொல்பவன் என்றைக்குமே முன்னுக்கு வந்த சரித்திரம் கிடையாது. ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைக்க நினைத்தார். சில சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சி செய்தார், விலைக்கு வாங்கினார், இன்றைக்கு அந்த சட்டமன்ற உறுப்பினர் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறார்.

அதிமுக மூன்று அணிகளாக பிரியும் என முன்னர் ஸ்டாலின் தெரிவித்தார். முதலில் உங்கள் கட்சி பார்த்துக் கொள்ளுங்கள் அழகிரி கட்சி தொடங்கினால், உங்கள் கட்சி மூன்றாகப் பிரியும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ,அன்று எங்களுக்கு வினை நினைத்தாய் இன்று அது உனக்கு நடக்கின்றது என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.