உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி. அறிவிப்பு

0
66
2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.  உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் சவுதம்டனில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து சூப்பர் லீக் போட்டி ஆரம்பமாகிறது என்றும் எஞ்சிய போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இந்த ஒருநாள் போட்டி தொடரில் இருந்து நோ-பாலை 3-வது நடுவர் கண்காணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் ஒருநாள் ஆட்டங்களின் முடிவுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்பதால் வரும் ஒருநாள் போட்டி தொடர்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி கூறுகையில், ‘உலக கோப்பையை வென்ற ஒரு ஆண்டு காலத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது என்பது பெரிய சவாலாகும். இந்த போட்டிக்கு நன்றாகவே தயாராகி இருக்கிறோம். சவாலான இந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நிலையாக திரும்பும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
author avatar
Parthipan K