உலகக்கோப்பை இறுதி ஆட்டம்:மோதிக் கொண்ட இருநாட்டு வீர்ரகள்!ஐசிசி அளித்த தண்டனை!

0
62

உலகக்கோப்பை இறுதி ஆட்டம்:மோதிக் கொண்ட இருநாட்டு வீர்ரகள்!ஐசிசி அளித்த தண்டனை!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கடந்த 9 ஆம் தேதி நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்ப ஜெய்ஸ்வால் மட்டுமே அதிகபட்சமாக 88 ரன்களை சேர்த்தார். அதன் பின்னர் ஆடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் ஒருவழியாக போட்டியை வென்று முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கோப்பையைக் கைப்பற்றிய கொண்டாட்டத்தில் ஓய்வறையில் இருந்த வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் ஓடிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களின் செய்கை இந்திய வீரர்களை சீண்டும் விதமாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாகவும் இருந்தது. இதற்கு இந்திய வீரர்களான ரவி பிஷ்னாய் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் எதிர்வினையாற்றினார். இதனால் மைதானத்தில் கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர் போட்டி நடுவர்கள் தலையிட்டு வீரர்களை அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் பின்னர் இதுபற்றி போட்டி நடுவர்கள் மற்றும் பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து வங்கதேச அணி வீரர்களான தோஹித் ஹிர்தாய், ஷமிம் ஹொசைன் ஆகியோருக்கு தலா 6 தகுதி இழப்பு புள்ளிகளையும், ராகிபுல் ஹசனுக்கு 5 தகுதி இழப்பு புள்ளிகளையும் வழங்கி ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய வீரர்களான ஆகாஷ் சிங் 5 புள்ளிகளும் ரவி பிஷ்னோய் 7 தகுதியிழப்புப் புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தகுதியிழப்புப் புள்ளிகள் இனிவரும் போட்டிகளில் வீரர்களுக்குக் கணக்கிடப்படும் எனத் தெரிகிறது. தகுதியிழப்பு புள்ளிகள் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும். குறைந்தது 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K