இவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

0
65

இவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 12,607 பதவியிடங்களுக்கு மட்டும் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தங்களது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் 17-ந் தேதி மாலை ஐந்து மணியுடன் நிறைவு பெற உள்ளது.

இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தேர்தல் நடைபெற உள்ள வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க உள்ள தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள வாக்குப்பதிவு நாளான வரும் 19ஆம் தேதி, வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என்றும், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

author avatar
Parthipan K