முன்னாள் காதலரை மறக்கமுடியாமல் தவிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

0
122

காதல் மிகவும் அழகான ஒரு உணர்வு, காதலிக்கும்போது நாம் காற்றில் மிதக்கிறோம். அதுவே அந்த காதலில் முறிவு ஏற்படும்போது கயிறறுந்த காத்தாடியாய் கீழேயே விழுந்து விடுகிறோம். அதுவரை நமக்கு எல்லாமுமாய் இருந்தவர்களை பிரேக்கப்பிற்கு பின்னர் மறப்பது என்பது அவ்வளவு எளிய காரியமில்லை. பலமுறை சுக்கு நூறாய் உடைந்து விடுகிறோம், சிலர் வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு கூட முயற்சி செய்கின்றனர், சிலர் மன அழுத்தங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் தங்களை விட்டு போனவர்களின் மீது பாசம் வைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையின் அழகான நாட்களையே தொலைத்து விடுகின்றனர். வாழ்க்கையை தொலைத்து நிர்கதியாய் நிற்கும்போது தான் எவ்வளவு மகிழ்ச்சியை இழந்திருக்கிறோம் என்பதே அவர்களுக்கு புரிகிறது, சிலருக்கு அது புரியாமல் கூட போய்விடுகிறது. அதிகமாக பாசம் வைத்திருந்த ஒருவரை மறப்பது கஷ்டம் தான் என்றாலும் இனிமேல் அவர்கள் வேறொருவருக்கு சொந்தமானவர்கள் அதனால் நீங்கள் அவர்கள் மீது பாசம் வைப்பது வீண். உங்கள் முன்னாள் காதலர்/காதலியை மறந்த எப்படி மறக்கலாம் என்று இங்கே காண்போம்.

1) காதல் தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம் தான் ஆனால் நாம் இருந்த அந்த உறவு இப்போது இல்லை என்கிற உண்மையை நீங்கள் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். உணர்வு ரீதியாக இந்த விஷயத்தை பார்க்காதீர்கள், ஒரு புதிய கண்ணோட்டத்துடன் இந்த காதல் முறிவை பாருங்கள்.

2) மற்றவர்கள் மீது அன்பு வைப்பதை விட உங்கள் மீது அன்பு வைக்க தொடங்குங்கள், உங்களை நீங்களே காதலியுங்கள் அந்த காதலில் ஒருபோதும் ஏமாற்றம் ஏற்படாது. எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு நீங்கள் பிரிந்து போகமாட்டீர்கள், உங்களை மெருகேற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள். அழகு, அறிவு என எல்லா வகையிலும் உங்களை நீங்கள் மெருகேற்றி கொள்ளுங்கள்.

3) நீங்கள் மிகவும் மனமுடைந்து இருந்தால் ஒரு நல்ல நிபுணரின் உதவியை நாடுங்கள், இதில் எந்தவித தவறும் இல்லை. உங்களை நேசிக்காத ஒருவரை நேசிப்பதை எப்படி நிறுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளை கேட்டறிந்து ஒரு நல்ல நிபுணரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.

4) காதலிக்கும்போது நமது காதலன்/காதலி மட்டும் தான் நமக்கு தெரிவார்கள், நமது குடும்பத்தினரோ அல்லது நண்பரோ நம் கண்ணுக்கு தெரிந்திருக்க மாட்டார்கள். இப்போது நீங்கள் அவர்களுடன் செலவிட வேண்டிய நேரம், உங்கள் குடும்பத்தினர் மற்றும் பிடித்த நண்பர்களுடன் அதிகளவிலான நேரத்தை செலவிட தொடங்குங்கள். அவர்களுடன் மகிழ்ச்சியாய் இருக்கும் நேரத்தில் உங்கள் கடந்த கால கசப்புகள் கண்டிப்பாக நினைவுக்கு வராது.

5) உங்களிடம் உள்ள எதிர்மறையான எண்ணங்களை கைவிடுங்கள் எல்லா விஷயத்தையும் நேர்மறையான எண்ணங்களுடன் கையாள தொடங்குங்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என யோசித்து உங்களை நீங்களே குழப்பி கொள்ளாதீர்கள், நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைக்க தொடங்குங்கள்.

6) உங்களுக்கு எந்த விஷயமெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் செய்ய தொடங்குங்கள், உங்களை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த உலகில் நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது, அதையெல்லாம் தேடி தெரிந்துகொள்ள இந்த காலத்தை ஒதுக்குங்கள்.

author avatar
Savitha