ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!

0
107

ஆரோக்கியமான சத்து மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த சத்து மாவை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் அவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச் சத்துக்களும் சரியான அளவில் கிடைக்கும். நவதானியங்கள் அடங்கிய சத்துமாவை வீட்டிலேயே சீக்கிரத்தில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – 200 கிராம்
கோதுமை – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 100 கிராம்
சிவப்பு அரிசி – 100 கிராம்
கைக்குத்தல் அரிசி – 100 கிராம்
பார்லி அரிசி – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
மக்காச்சோளம் – 100 கிராம்
வெள்ளை சோளம் – 100 கிராம்
கம்பு – 100 கிராம்
கவுனி – 100 கிராம்
சோயா பீன்ஸ் – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
கொண்டக்கடலை – 75 கிராம்
கருப்பு சுண்டல் – 75 கிராம்
பச்சை பயிறு – 50 கிராம்
வரகரிசி – 50 கிராம்
தினை – 50 கிராம்
சாமை – 50 கிராம்
குதிரைவாலி – 50 கிராம்
கொள்ளு – 50 கிராம்
வேர்கடலை – 50 கிராம்
பாதாம் பருப்பு – 50 கிராம்
முந்திரி பருப்பு – 50 கிராம்
பிஸ்தா – 20 – 25
ஏலக்காய் – 10
சுக்குப் பொடி – 2 ஸ்பூன்

செய்முறை:

  • கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பச்சைப்பயறு, கொண்டக்கடலை, கருப்பு சுண்டல், உளுந்து ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்த பின், தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால் முளை கட்டியிருக்கும்.
  • முளைக்கட்டிய அனைத்து பயிர் வகைகளும் மூன்று நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்கள் எல்லாம் ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
  • ஒரு நாள் வெயிலில் காய வைத்த பொருட்களை எல்லாம் மிதமான தீயில் வாசம் வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
  • பின் அனைத்து பொருட்களையும் அளவு குறைவாக இருந்தால் மிக்ஸியிலேயே அரைத்துக் கொள்ளலாம் அல்லது மாவு மில்லில் கொடுத்தும் அரைத்து கொள்ளலாம்.
  • சத்து மாவு அரைத்ததும் சூட்டோடு சூடாக அதை ஆற வைத்து சலித்து காற்றுப்புகாத பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

சத்துமாவு கஞ்சி செய்முறை:

  • முதலில் தேவையான அளவு மாவை தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின், கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, கரைத்த மாவை ஊற்றி கிளறவும். சேர்ந்து வந்ததும் இறக்கி பரிமாறலாம்.
  • குழந்தைகளுக்கு உப்பிற்கு பதில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி கலந்து கஞ்சி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
author avatar
Parthipan K