காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதி

0
107
குடியாத்தம் ஜெயமாருதி
குடியாத்தம் ஜெயமாருதி

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதி

வேலூர் மாவட்டம், குடியாத்தம்

நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரர் ஜெயமாருதி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் மூர்த்தியின் மகன் ஜெயமாருதி(17). இவர் வேலூர் விஐடியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 – ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் 12 வயதிலிருந்தே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம், காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் 74 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்று 4- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் கடந்த நவம்பர் மாதம் 27 – இல் தொடங்கி, டிசம்பர் மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, அங்கு போட்டிகளில் பங்கேற்றார்.

அங்கு நடைபெற்ற போட்டியில் 74-கிலோ எடைப் பிரிவில் ஸ்குவாட் 253-கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், புதிய உலக சாதனையும் நிகழ்த்தினார்.

பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ தூக்கி மொத்தம் 4- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் நாளை நியூசிலாந்திலிருந்து சொந்த ஊர் திரும்பும் ஜெயமாருதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க சீவூர் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்