மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை! அரசு பள்ளி மாணவி JEE தேர்வில் வெற்றி!

0
76

என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர ஜே.இ.இ நுழைவு தேர்வை எழுதி திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றது மிகவும் பாராட்டப்பட்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

திருப்பூரை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் கார்பென்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சௌந்தர்யா.

சௌந்தர்யா திருப்பூரில் உள்ள கணபதி பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இந்நிலையில் மேல்படிப்புக்காக அனைவரும் படிக்க விரும்பும் ஐஐடியில் சேர்வதற்கு ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பெருமை தேடி தந்துள்ளார்.

77.9 சதவீத மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்ட அளவில் அரசுப்பள்ளியில் படித்து ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்கிற பெருமையை சௌந்தர்யா பிடித்துள்ளார்.

இதைப்பற்றி சௌந்தர்யாவிடம் கேட்டபொழுது ” நான் பாடங்களை மனப்பாடம் செய்ய மாட்டேன் புரிந்துகொண்டு படிப்பேன். நுழைவு தேர்வில் வெற்றி பெற தனியாக சிறப்பு வகுப்புகள் எதற்கும் நான் போகவில்லை. என் வகுப்பு ஆசிரியர்கள் எனக்கு நன்றாகப் பாடம் நடத்தி கற்றுக் கொடுத்தனர். நான் 12 ஆம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன். ஐஐடியில் சேர்ந்து மென்பொருள் பிரிவில் படித்து அதில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இதனால் நுழைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என அவர் கூறினார்.

அரசு பள்ளியில் பயின்று ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

author avatar
Kowsalya