மாணவ மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை கைது!

0
63

திருப்பூர் அருகே இடுவாயில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிபவர் கீதா இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இருக்கின்ற கழிவறையை பட்டியலின மாணவ, மாணவிகளை சுத்தம் செய்யச் சொன்னதாகவும், சுத்தம் செய்ய மறுத்த மாணவ-மாணவிகளை தங்களுடைய சாதிப்பெயரை தெரிவித்து திட்டியதாகவும் ,தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை மீது திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் வழங்கப்பட்டது, இந்த புகாரின் அடிப்படையில் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார்கள் விசாரணைக்கு பிறகு தலைமை ஆசிரியை கீதாவை பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி ஆதி திராவிடர் நலத் துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சரவணகுமார் தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மங்கலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்கள்.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் இவருடைய முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து கீதா நேற்று திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார் இதுதொடர்பாக விவரம் மங்களம் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தலைமை ஆசிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.