இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி!

0
85

இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த  ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

இந்த ஒமிக்ரானின் வருகைக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவிலும் தினசரி கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 16 மற்றும் 17 வயது உடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறார்களுக்கு பூஸ்டராகப் பயன்படுத்தப்படும்  ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அந்த நாட்டில் 93 சதவிகிதத்திற்கும்  அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசியும்,  18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியும் பெற்றுள்ளனர். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.