பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார்! பிரதமர் மோடி குறித்து இராகுல் காந்தி விமர்சனம்!!

0
164
#image_title

பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார்! பிரதமர் மோடி குறித்து இராகுல் காந்தி விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று பிரதமர் மோடி அவர்கள் கடவுளுக்கே பாடம் எடுப்பார்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் சாண்டா கிளாராவில் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிறகு இராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி அவர்கள் “எந்த ஒரு மனிதரும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு இந்த உலகம் மிகப்பெரியது. இந்தியாவில் எங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கும் ஒரு குழுவினர் உள்ளனர். அந்த குழுவினர் கடவுளைவிட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் அமர்ந்து என்ன நடக்கின்றது என்று உரையாற்றுவார்கள் அதற்கு சரியான உதாரணம் எங்கள் நாட்டு பிரதமர் அவர்கள் தான்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய இராகுல் காந்தி அவர்கள் “நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கடவுளுடன் உட்கார வைத்து பாருங்கள். பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று பிரதமர் மோடி அவர்கள் கடவுளுக்கே பாடம் எடுப்பார். அந்த சமயத்தில் கடவுள் தான் படைத்தது என்ன என்பதை மறந்து குழப்பமடைவார்” என்று கூறினார்.

மேலும் இராகுல் காந்தி அவர்கள் “இப்படி உள்ளவர்கள் தங்களால் வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாறையும், விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், ராணுவத்துக்கு போர் முறையையும் விளக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அதன் மையப்பொருள் என்பது சாதாரணமான ஒன்று. அவர்கள் எதையும் காது கொடுத்து கேட்க தயாராக இருப்பது கிடையாது என்பதுதான் உண்மை” என்று கூறியுள்ளார். இராகுல் காந்தி அவர்களுடைய இந்த பேச்சு அந்த நிகழ்ச்சியில் இருந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.