நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது…! திரும்பி போங்க…!

0
152

பெரியார் சிலை அவமதிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு என்பது தமிழக அரசிற்கு இருக்கின்றது. இதனை கண்டுகொள்ளாமல் இருப்பார்களேயானால், அது பெரியாருக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும், என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் தந்தை பெரியாரின் சிலைக்கு காவி சாயம் பூசி அசிங்கப்படுத்தி இருப்பது சமூக விரோத சக்திகளின் ஒரு சமூக விரோத செயலாகவே இருக்கின்றது.இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களை செய்பவர்கள் மீது இரும்புக் கரத்தை பிரயோகம் செய்து அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதனை தமிழ்நாட்டில் இருக்கின்ற ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுதிரண்டு நிச்சயமாக முறியடிப்பார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. தமிழகம் எந்த சூழ்நிலையிலும், மதவாத கும்பலுக்கு அடிபணியாது அதை அனுமதிக்கவும் செய்யாது.

ஆகவே தந்தை பெரியாரின் சிலையை அவமதிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புணர்வு தமிழக அரசிற்கு இருக்கின்றது. இதை செய்ய மறுத்தால், தந்தை பெரியாருக்கு எதிராக செய்யப்பட்ட மாபெரும் குற்றம் புரிந்தவர்கள், என்கின்ற பழியை அதிமுக சுமக்க நேரிடும் என்று தெரிவித்திருக்கின்றார்.