புல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும்!!
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் இயக்குனர் பேரரசும் முக்கியமானவர். நாட்டரசன்கோட்டையில் பிறந்த இவர் பெரும்பாலும் தான் இயக்கும் தன்னுடைய திரைப்படங்களுக்கு ஊரின் பெயர்களையே படத்தின் பெயராக வைப்பார். இவர் சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
ரெயின்போ ப்ரோடக்சன்ஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’. இந்த படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது, இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை பற்றி பேசுகிறது. ஆனால் சிலரது செயல்பாடுகளை பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது. என்று சொல்லத் தோன்றுவதாக கூறினார்.
டிக்டாக், ரீல்ஸ் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை என்றும் சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதம் சகித்து கொள்ள முடியாத அளவிற்கு இருப்பதாகவும் கூறினார். குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ள வேண்டும் என்றும் கூறினார்.
நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்கு காரணமாக செல்போன்கள் தான் இருப்பதாகவும், ஆகவே தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நம் சுதந்திரம் இப்படி மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுப்பதாகவும், கூறிய அவர் செல்போனில் புல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் கூறினார்.
நாடு இப்படி போய்க் கொண்டிருக்கையில் நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை என்று கூறிய அவர் பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த பட விழாவில் அவர் பேசினார்.