“சிறுதொழிலாளியாக இருந்து பல கோடிகளுக்கு முதலாளியான” வசந்தகுமார் வாழ்வில் உயர்ந்தது எப்படி? – Biopic

0
62

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

தொழிலாளியாக இருந்த இவரின் தொடக்க கால வாழ்க்கை முதல், இவர் வாழ்வில் வெற்றி பெற்ற இறுதிக் காலம் வரையில் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். இவர் பட்டப்படிப்பு எல்லாம் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர்.

1970இல் விஜிபி நிறுவனத்தில் விற்பனை பணியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே சுயதொழில் செய்து எப்படியாவது முதலாளியாக வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

அதன்பிறகு 1978 இல் வசந்த் & கோ என்கிற பெயரில் மின்சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என விற்பனை செய்யும் வகையில் சிறிய கடை ஒன்றினை ஆரம்பித்தார்.

அவர் தொழில் தொடங்கிய நேரத்தில் கையில் சல்லி பைசா கூட இல்லை. ஆனால் எப்படியாவது உழைத்து முன்னேறி முதலாளி ஆகிவிட வேண்டும் என்பதில் மட்டுமே தான் குறியாக வாழ்ந்து வந்ததாக தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்போது நண்பரொருவர் மூடி வைத்திருந்த கடையை தான் திறந்து சுத்தம் செய்து நடத்தியதாகவும், தனது எதிர் கடைக்கு வெளியே இருந்த பெயர் பலகையில் தன்னுடைய “வசந்த் & கோ” கடையின் பெயரை எழுதி வைத்திருந்ததாகவும் கூறியிருப்பார்.

அதன் பிறகு, அவர் வியாபாரத்தில் புது வியூகமாக, மாத தவணையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்ய அந்தக் காலகட்டத்திலேயே திட்டம் போட்டுள்ளார். அதுவே வசந்த் & கோவின் மிகப்பெரிய வெற்றிக்கு முதல் படியாக இருந்தது.

மாதத் தவணையில் முதல்முறையாக தனது நண்பரின் நாற்காலி செய்யும் இடத்திலிருந்து நாற்காலிகளை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார்.

“25 ரூபாய்க்கு இரண்டு மூன்று நாற்காலிகளை வாங்கி அதனை 30 ரூபாய்க்கு விற்றுவிடுவேன். ஆனால், கடைக்கு வருபவர்கள் சிலரிடம் காசு இருக்காது. 15 ரூபாய்தான் இருக்கிறது என்பார்கள். அதனால் அவர்களிடம் 15 ரூபாய்க்கு நாற்காலியை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 15 ரூபாயை, தினமும் ஒவ்வொரு ரூபாயாக கொடுக்கச் சொல்வேன். கடன் கொடுத்ததற்காக ஒரு ரூபாய் அதிகம் பெற்றுகொள்வேன்” என்று அப்போது பேட்டியில் கூறியிருப்பார்.

தமிழகத்தில் மாதத் தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வந்ததன் விளைவாக வசந்த் & கோ கடை பெரிய கம்பெனி ஆக உருவெடுத்தது.

அதன்பிறகு பிரபலமான அந்த கம்பெனி தற்போது, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 82 கிளைகளாக இருக்கின்றது. 2008 ஆம் ஆண்டிலிருந்து வசந்த் தொலைக்காட்சி ஒன்றினை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

மேலும் இவரே எழுதிய “வெற்றிப் படிக்கட்டு” என்கிற சுய சரிதை புத்தகத்தினை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா வெளியிட்டிருந்தனர்.

அரசியலில் வசந்தகுமார்: 

இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக பதவி வகித்த குமரி அனந்தனின் சகோதரர் ஆவார்.

From a small worker to an employer for many crores Vasanthakumar Biopic

தமிழக முன்னாள் பாஜக தலைவரும் தற்போது ஆந்திராவின் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் சித்தப்பா ஆவார்.

இவர் அரசியலில், காங்கிரஸில் இணைந்த பின்பு 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019 இல் தனது பதவியை ராஜினாமா செய்த பின்பு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போட்டியிட்டார். அதில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

author avatar
Parthipan K