இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
82

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக Speed Institute, Etoos India, E-Box என்று வெவ்வேறு நிறுவனங்களின் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சியை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

நடப்பு கல்வியாண்டுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை, E-Box நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நடத்த உள்ளது. இதற்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு தேதிக்கு முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் https://neet.e-box.co.in என்ற இணையதளத்தில் தங்களின் 11 ஆம் வகுப்பு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு Log In செய்து பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆன்லைனில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஒவ்வொரு வார இறுதியிலும், அந்த வாரத்துக்கான பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களில் 1,633 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K