முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த மேலும் ஒரு வழக்கு!

0
64

சென்ற 19ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டுக்கள் போட்டு விட கூடாது என்று மாநில தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டது.

ஆனாலும் ஆளுங்கட்சியான திமுக தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ஆங்காங்கே கள்ள ஓட்டுக்களை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

அதனடிப்படையில், சென்னை பெருநகர மாநகராட்சி 200 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் கள்ள ஓட்டு பிரச்சனை எழ தொடங்கியது.

இதன் காரணமாக, திமுக மற்றும் அதிமுகவினர் இடையே பிரச்சனை எழுந்தது. ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 49வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவிலுள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் கள்ள ஓட்டு போட படுவதாக அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட அவர் உடனடியாக அதிமுக நிர்வாகிகளுடன் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது திமுக தொண்டர் நரேஷ்குமார் என்பவரை ஜெயக்குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பிடித்தார்கள்.

அதன்பிறகு அவரது சட்டையை கழற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது. ஜெயக்குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் நரேஷ்குமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். அப்போது அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது கொலை முயற்சி வழக்கு, மிரட்டல், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்களுடன் காயம் ஏற்படுத்தும் நடவடிக்கை உட்பட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஜெயக்குமாரை சென்னை பட்டினப்பாக்கத்தில் அவருடைய இல்லத்தில் வைத்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுந்தர வதனம் தலைமையிலான 40 பேர் அடங்கிய காவல்துறையினர் நேற்று இரவு 8 மணி அளவில் கைது செய்தார்கள்.

இதற்கு அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவரை லுங்கியுடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன்பிறகு மார்ச் மாதம் 7ஆம் தேதி வரையில் தயக்கம் வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லி சிறையில் அடக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், பூந்தமல்லி சிறையிலுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார் தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெயக்குமார் உட்பட 110 பேர் மீது அரசு அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, நோய் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்ட சூழ்நிலையில் ராயபுரம் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.